தி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்
ஒரு நாள் எதார்த்தமாக எங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் தி இந்து தமிழ் நாளிதழை படிக்க நேர்ந்தது. (அறிமுகமான சமீபம்). படித்து முடித்தவுடன் மற்ற தினசரிகளைப் படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஏற்படவில்லை. அசாதாரணமான ஒரு உணர்வு தோன்றியது. ஆம் மற்ற தினசரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் முதல் முறை படித்தவுடனேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது நிஜம்.உடனே விடுதியிலும் அந்த நாளிதழை வரவழைக்க பெருமுயற்சி எடுத்து ஒருமாத போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக வரவழைத்தும் விட்டோம்.அதிலிருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன் .மிகைப்படுத்தவில்லை உண்மையாகவே மற்ற தினசரிகளிலிருந்து தி இந்து தமிழ் வேறுபட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.
தினசரிகளுக்கே உரிய அனைத்து வரைமுறைகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்து அதில் வெற்றியும் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை தானே??தமிழ் தினசரிகளுக்கே உரிய சில குறைபாடுகள் இதற்கும் பொருந்தினாலும், நாம் எதிர்பார்க்கும் விசயங்களில் நடுநிலைத்தன்மையோடு நடந்து கொள்வது உண்மையிலேயே பெரிய விசயம் தான்.செய்திகளுடன் சில இணைப்பாக வெளிவரும் மற்ற தினசரிகளுக்கு மத்தியில் இணைப்புகளுடன் சில செய்திகளாக வருவதுதான் இதனுடைய வெற்றி ரகசியம்.ஒவ்வொரு நாளும் வண்ணமயமான இணைப்புகளோடு வெளிவந்து வாசகர் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருப்பது இதனுடைய வளர்சிக்கு காரணங்களுள் ஒன்றெனக் கூறலாம்.
தி இந்து தமிழ் நாழிதழின் சிறப்பு என்றால் அது நடுப்பக்கம் தான்.அற்புதமான பல அரிய தகவல்களோடு அலங்கரிக்கப்படும் நடுப்பக்கத்தின் ரசினாகவே மாறிவிட்டேன் நான்.நாளிதழ் வாங்கியவுடன் தலைப்புச் செய்தியைப் பார்க்கும் பழக்கம் போய் நடுப்பக்கத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். விடுமுறை நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர்களால் நிரப்பப்படும் பக்கமாக நடுப்பக்கத்தை தாராளமாகக் கூறலாம்.கலை, இலக்கியம் ,விளையாட்டு, அறிவியல் என அனைத்தையும் தரும் இடம் தி இந்து தமிழின் நடுப்பக்கமாகத் தான் இருக்க முடியும். இதழாளர் சமஸ் எழுதும் நிலம்,நீர்,காற்று எனும் தொடர் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது தான் நீர் பகுதி முடிந்து நிலம் நோக்கிய பயணம் தொடரவிருக்கிறது.
நீர் பகுதியில் மீனவர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவேனும் தெரிந்து கொள்ள வைத்தது இந்த பதிவுகள் தான்.கடலோடிகள் எனும் அழகிய தமிழ் சொல்லையும் இங்குதான் நான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். கடலோடிகளின் பிரச்சனைகளை அவர்களின் குரலிலேயே பதிய வைத்து ஒரு நீரோட்டத்துக்கே உரிய தெளிவை ஏற்படுத்திவிட்டார் திரு.சமஸ். படிக்காதவர்கள் அவருடைய வலைப்பக்கத்தில் படித்துப் பாருங்கள்.
தி இந்து தமிழ் நாளிதழின் இன்னொரு சிறப்பு இணைப்பு மலர்களைக் கூறலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு இணைப்புடன் வெளிவரும் ஒரே தமிழ் தினசரி இதுவாத்தான் இருக்கும்.அதிலும் மாயாபஜார், பெண்கள் உலகம்,இந்து டாக்கீஸ் , இளைஞர் ஸ்பெசல் உள்ளிட்டவை மிகவும் அருமையாக இருக்கும். வாசகர்களுக்குரிய மரியாதையை தருவதிலும் தி இந்து தமிழ் தனித்தே நிற்கிறது. நமது குரலிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதி கூட வந்துவிட்டது. உங்கள் குரல் மூலம் நமது பகுதி பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்யலாம்.ஒரு ஒரு பக்கத்திற்கும் மேலே கூட தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.செய்திகளை விரிவாக தருவது போல தகவல்களை விரிவாக தருவது தான் ஆச்சரியமான ஒன்று.இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலங்கள் எழுதும் புதிய பகுதி அறிமுகமாயிருக்கிறது.தங்கர்பச்சான்,கிரேசி மோகன் தொடர்கள் அற்புதமாக போகிறது.
எல்லாமே சிறப்பு தான எனப் பார்த்தால் எதுவுமே இவ்வுலகில் முழுமையாக சிறப்பாக இருக்க முடியாது, அவ்வகையில் இதற்கும் சில குறைபாடுகள் உண்டு. அரசியலில் ஆளுங்கட்சி சார்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து. தலையங்கமும் அவ்வளவு ஒரு பலமானதாக தெரியவில்லை. (என்னைப் பொறுத்தவரை தலையங்கம் என்றால் தினமணி தான்). அதே போல தி.மு.க பற்றி நேர்மறையான பதிவுகள் வருவது குறைவு தான்.இன்னொன்று தேவையில்லாத அல்லது அதிகம் விரும்பாதவைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம். ஆன்மீக சிறப்பு மலர் முழுதும் அதற்காகவே தான். நான்கு பக்கங்கள் முழுதும் அதே!! அதே போல சொந்தவீடு மலரும் அப்படித்தான்.நிறைகளோடு ஒப்பிடும் போது குறைகள் அவ்வளவாக இல்லை. எனவே மற்ற தினசரிகளுக்கு மாற்றாக கண்டிப்பாக தி இந்து தமிழ் நாளிதழை வரவேற்கலாம். இந்த ஒரு வருடத்திலேயே இப்படி என்றால் இனி வரும் காலங்களிலும் கண்டிப்பாக மேன்மையுறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது........
பதிவு குறித்தும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்தும் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....