Tuesday, May 10, 2016

நுழைவுத்தேர்வு

நுழைவுத்தேர்வு வைத்து தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதற்கு ஆட்சேபிக்காத மத்திய அரசின் நிலைப்பாடுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதிலும் தமிழகம் போன்ற பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படாமல் 12ஆம் வகுப்பை நேரடியாக நடத்தி மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக வைத்திருக்கும் நமக்கு இது பொருந்துமா என்பதையும் பார்க்க வேண்டும். சிபிஎஸ்இ தரத்திலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் போது அதை எழுதும் மாணவர்களின் கல்வித்தரமும் அப்படியே இருக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கென தனி சிறப்பு வகுப்புகள் செல்லும் மேட்டிமைத்தன அல்லது பணக்கார மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமானதாக இருக்கும். கிராமப்புற ஏழை நடுத்தர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு குறித்த ஐயப்பாடுகளே இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை எனும்போது நுழைவுத்தேர்வு எழுதினால் தான் மருத்துவர் கனவு சாத்தியம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்..?..


மருத்துவப்படிப்புக்கென ஒரு நுழைவுத்தேர்வு, பொறியியல் படிப்புக்கென ஒரு நுழைவுத்தேர்வு, கலைப்படிப்புகளுக்கென ஒரு நுழைவுத்தேர்வு, விவசாய படிப்புகளுக்கென ஒரு நுழைவுத்தேர்வு என வெறும் நுழைவுத்தேர்வுகளே வைத்துவிட்டு போகலாமே..? பொதுத் தேர்வு என்பது எதற்கு..? இப்போதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 15 சதம் மத்திய ஒதுக்கீடு, அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் தான் நிரப்பப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய‌ தீர்ப்பு அதே 15 % மத்திய ஒதுக்கீடு போக மீதி உள்ள  மாநில அரசுக்கானவற்றை அதே நுழைவுத்தேர்வு மூலமாகத் தான் நிரப்ப வேண்டும் என்று சொல்வது மாநில உரிமைகளை பறிப்பதாகாதா..? அந்தந்த மாநில இடங்களையும் நாங்கள் சொல்லும் வழியில் தான் நிரப்ப வேண்டும் என்று கூறுவது வேறு என்னவாக இருக்க முடியும்..?..


மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதே இன்னும் பல மாணவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. ஐ.ஐ.டி கோச்சிங் சென்டர்களிலும் மருத்துவ நுழைவுத்தேர்வு கோச்சிங் சென்ட்களிலும் யார் படிக்கிறார்கள் என ஒரு கருத்துக் கணிப்பை எடுத்துப்பாருங்கள். இன்னொன்று சமூக இட ஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படும்..? என பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது இந்த தீர்ப்பு...


அகில இந்திய அளவிலும் ஒரே கல்வி முறை, மாணவர்களுக்கான சம வாய்ப்பு இதெல்லாம் எப்போது சாத்தியமோ அப்போது தான் மருத்துவ நுழைவுத்தேர்வு மட்டும் அல்ல அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் சாத்தியம்....!

2 comments:

  1. "பதினோறாம் வகுப்புகளே பெரும்பாலும் நடத்தப்படாமல் 12ஆம் வகுப்பை நேரடியாக நடத்தி ....." why no parent is objecting to this stupidity?. Since we have a corrupt system, you mean to say everybody should bend to suit that, instead of seeking correction?
    If the state syllabus is lacking, we must ask for it to be upgraded.
    Producing high marks without knowledge is highly detrimental to the individual and to the society.

    ReplyDelete
  2. மிக மிக அருமையான கட்டுரை சீலன்!! உங்கள் கேள்விகள் மிகவும் நியாயமானவை. ஆனால் இந்த 11 ஆஅம் வகுப்பே நடத்தப்படாமல் 12 ஆம் வகுப்பு மட்டுமே நடத்தப்படுவதைத்தானே பல பெற்றோர்களும் ஆதரிக்கின்றார்கள். இதுவரை எவரும் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லையே. பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாகத்தானே உருவாக்கி வருகின்றார்கள். எதற்கு? மருத்துவம் இல்லை பொறியியல். கல்வி முறையே மாற வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் புரட்சி செய்து போராட்டம் நடத்தினால் மட்டுமே அது மாறும் ஆனால் நாம்தான் போராடவே மாட்டோமே எல்லாவற்றிற்கும் அடிபணிந்து பூம் பூம் மாடுகள் போலத்தானே இருக்கின்றோம் அதனால்தானே கல்வி வியாபாரமாகி இன்று பல கல்வி நிறுவனங்களுக்குப் பணத்தைக் கஷ்டப்பட்டேனும் கடனாக வாங்கிக் கொடுக்க பெற்றோர்கள் தயராக இருக்கும் போது அவர்களும் அள்ளத்தானே செய்வார்கள். ஊழலுக்கு நாமும் உடந்தை என்பதை இங்கு சொல்லிக் கொள்கின்றேன் சீலன்...

    கீதா

    ReplyDelete