Wednesday, October 15, 2014

என்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி


என்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி


இத‌ற்கு முன்னர் எழுதிய என்னைக் கவர்ந்த திரைப்படம்-புதுக்கவிதை பற்றிய பதிவை படிக்க இங்கே க்ளிக்கவும்...

http://pudhukaiseelan.blogspot.com/2014/09/blog-post_8.html


என்ன சொல்வதென்று தெரியவில்லை ! ஏன் என்றும் தெரியவில்லை !எனக்குப் பிடித்த படங்களில் பெரும்பாலானவை ரஜினி படங்களாகவே இருக்கின்றன. நான் ரஜினி ரசிகன் என்பதால் இப்படியா ? இல்லை, இந்தப் படங்களால் தான் நான் ரஜினி ரசிகனா  ? என்று சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குப் பிடித்த படங்களில் ரஜினி படங்கள் ,மட்டும் அல்ல, பிற படங்களும் இருக்கின்றது..எனவே, என்னடா இவன் ரஜினி படங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறானே என எண்ண வேண்டாம்.பிற படங்களைப் பற்றியும் நேரம் கிடைக்கும் போது பகிர்வேன்.



தளபதி படம் எனக்கு எப்படி அறிமுகமாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். ஏனென்றால் இந்தப் படம் ரிலீஸாகும் போது (1991) நான் பிறக்கக் கூட இல்லை.என்னுடைய அப்பா தீவிர சிவாஜி ரசிகர். ஆனால் சிவாஜிக்குப் பிறகு ரஜினியை பிடிக்கும். நினைத்துப் பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு கமலையும் , எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ரஜினியையும் பிடிக்க வேண்டும், ஆனால் மாற்றிப் பிடிக்கிறது.நான் பார்த்த வரையில் பெரும்பாலானோர்க்கும் இப்படித்தான். .சரி நம்ம விசயத்துக்கு வருவோம்  நான் சிறிய வயதாக இருக்கும் போது என் தந்தை தளபதி படம் பார்த்த அனுபவத்தை சொல்லியிருக்கிறார். பெங்களூரில் இருந்தபோது அங்கே ரிலீசான தமிழ் படங்களிலேயே ( குணாவும் தளபதியும் ஒரே நாள் ரிலீஸ்) அதிக ரசிகர்களால் விரும்பப்பட்ட படமாம். அன்றிலிருந்து எனக்கும் தளபதி படத்தைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது.மணிரத்தினம் இயக்கம் என்பதும், பாடல்களின் மெகாஹிட்டும் இன்னுமொரு காரணங்கள். ஹாஸ்டல் வந்த பின்னர் தான் முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.



கதை ஒன்றும் புதியதெல்லாம் ஒன்றுமில்லை. மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதையின் டிங்கரிங் தான். நட்பின் பெருமையை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். எனவே அதைப் பற்றி சொல்ல வேண்டாம் என நினைக்கின்றேன். என்னை எப்படிக் கவர்ந்தது என்று மட்டும் பார்ப்போம்.

ஓப்பனிங் சீனிலேயே ஒரு சிறிய பெண் தனக்கு பிறக்கும் குழந்தையை  புகைவண்டியில் விட்டுவிட்டு வருவாள், வண்டி கிளம்பும் போது அதன் கதவு திறந்து கொள்ளும், பின்னாலேயே அழுது கொண்டு ஓடிவருவாள்.... அங்கே தொடங்கும் இசைஞானியின் ராஜ்ஜியம் படம் முடியும் வரை தொடரும். இந்த படத்திலும் ரஜினியின் என்ட்ரி சீன் செம கலக்கலாக இருக்கும். வில்லன் திணேசின் தலையைப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கமாக முகத்தை காட்டுவார் பாருங்கள், தியேட்டரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் ??!! இந்தப் படத்தில் ரஜினி வித்தியாசமான தோற்றத்துடன் இருப்பார். க்ளீன் சேவ், மேக்கப் இல்லா முகம், சிறிய மீசை என வித்தியாசமாக‌ தோன்றுவார். ஓப்பனிங் சீனிலிருந்து கடைசி காட்சி வரை ரஜினியின் நடிப்பு செமயாக இருக்கும். ரஜினிக்கு நடிக்கத் தெரியாது என்பவர்கள் எல்லாம் தளபதி படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று சொல்லலாம்.இதில் இன்னொரு புதுமையை ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன் செய்திருப்பார்.ரஜினி வரும் முக்கியமான சீனில் எல்லாம் சூரியனும் ஒரு கதாப் பாத்திரமாக இருக்கும். ஏனெனில் ரஜினியின் பெயர் இதில் சூர்யா. 

ராக்கம்மா கையத்தட்டு பாடலில் ராஜா எங்கோ போய்விடுவார், அந்தப் பாடலின் இடையிலேயே ரஜினி ஷோபனா முதல் சந்திப்பும் நடைபெறும் விதமாக இருக்கும், ரசனையான காட்சி.ஒரு காட்சியில் ரஜினியிடம் ஒரு சிறுமி உதவி கேட்பாள், அப்போது அவரிடம் பணம் இருக்காது, உடனே சுற்றிலும் பார்த்துவிட்டு அங்கிருக்கும் ஷோபனா போட்டிருக்கும் வளையளை கழட்டிக் கொடுத்துவிடுவார். மீண்டும் அதை திருப்பிக் கொடுக்க வருவார். அப்போது ஷோபனா பரதநாட்டியம் ஆடுவதை பார்த்து நின்று ரசிப்பார், அதை அவர் பார்த்துவிடவும் வளையளை உயர்த்திக் காட்டுவார், உடனே ஷோபனா ரஜினியை நோக்கி வருவார். வளையல் வேண்டாம் வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள் என்பார். அப்போது ரஜினி இதோபாரு யாருக்காவது உதவி செய்யனும்னு நெனச்சா, நீயே உன் கையாலேயே செய்து விடு என்று சொல்லி கையில் கொடுத்துவிட்டு போய்விடுவார், ஷோபனாவுக்கு அப்போது தான் காதலின் வருவது போல அழகாக வடிவமைத்திருப்பார் இயக்குனர்.

இன்னொரு காட்சியில் ரஜினி மம்முட்டியிடம் சேர்ந்த பின்பு, ஒரு போலீசின் கையை வெட்டுவதை ஷோபனா பார்த்துவிடுவார். படிக்கரையில் அமர்ந்து அழுது கொண்ட்டிருக்கும் ஷோபனாவிடம், இந்த சூர்யா இப்படித்தான் என்ன பிடிக்கலையா... எனக் கேட்பார், அவர் பிடிச்சுருக்கு என்பார், அப்புறம் ஏன் அழற என்று கேட்பார், தெரியல‌ என்று சொல்லிவிட்டு ரஜினியின் மீது சாய்வார் அபோது ரஜினி காட்டும் எக்ஸ்ப்ர்சன் சே சான்சே இல்லை.... பின்பு ஷோபனாவின் அப்பா விரும்பாததால் காதல் தோற்றுவிடும், பின்னர் ரஜினியை பார்க்க வரும் ஷோபனாவிடம் அவரை பேச விடாமல் அனுப்பிவிடுவார், அனுப்பிவிட்டு அப்படியே சைட் லுக்கில்  ஷோபனாவைப் பார்த்துவிட்டு மேலே பார்ப்பார். கலங்கிய விழிகளுடன்,பேக்ரௌண்டில் மாலை நேர சூரியன் இருக்கும், அப்போது ராஜா போடுவார் பாருங்கள் ஒரு மியூசிக் !! , அட, அட, அட, "நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்" என்பதை வயலினில் இசைத்துவிட்டு, "சேர்ந்ததே நம் ஜீவனே" என்பதை புல்லாங்குழலில் வாசிக்கும் விதமாக போட்டிருப்பார். இந்த ஒரு சீனுக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அதே போல ஷோபனா ரஜினியின் தம்பியான‌ அரவிந்த சாமியை திருமணம் செய்த பின்பு, அரவிந்த்சாமியை  எச்சரிக்க‌ வரும் ரஜினியும் ஷோபனாவும் எதார்த்தமாக‌ சந்தித்துக் கொள்வர். அவர் படியில் மேலேறி வர, ஷோபனா கீழிறங்கிவர அப்போதும் அதே தீமை கொஞ்சம் மாற்றிப் போடுவார், அதுவும் செம சீன். 



ஒரு முறை ரஜினியை ஷோபனா கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கே ஜெய்சங்கரும், ஸ்ரீவித்யாவும் இருப்பார்கள், ஒரு பக்கத்தில் இவர்கள் நிற்க எதிர் திசையில் ஜெய் நிறபார், அப்போது பின்னால் தொடர் வண்டி ஓடும் சத்தம் கேட்டு ரஜினியும் வித்யாவும் ஒன்றாக‌ திரும்பி பார்ப்பார்கள், ஸ்ரீ வித்யா சோகத்துடனும், ரஜினி கலங்கிய விழிகளுடனும், அப்போது பேக்ரௌவுண்ட் மியூசிக்காக சின்னத் தாயவள் மியூசிக் ஒலிக்கும். அதுவும் அருமையான‌ சீன்.

இது போல "ஏன்னா நீ என் நண்பன் டா, தொட்ரா பாக்கலாம், ஜெய்சங்கர் ரஜினி சந்தித்துத் கொள்ளும் காட்சி, ரஜினியும் அந்த குழந்தையும் பேசிக் கொள்ளும் காட்சி,ரஜினி ஸ்ரீவித்யா சந்தித்துக் கொள்ளும் காட்சி, அந்த குழந்தையும் ஸ்ரீ வித்யாவும் பேசிக் கொள்ளும் காட்சி என சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையும் அருமையான காட்சிகள் தான். அதிலும் அந்த ரஜினி , ஸ்ரீவித்யா சந்தித்துக் கொள்ளும் காட்சி நம் கண்களை ஈரமாக்கிவிடும்.

இந்தப் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி இறுதி காட்சி தான். ட்ரெயின் கிளம்பப் போகும் போது அரவிந்த் சாமி அம்மா, போலாமா எனக் கேட்பார், அவர் ரஜினியை பார்ப்பார், அவர் அப்படியே நிற்பார், இன்னொரு முறையும் கேட்பார், அம்மா ட்ரெயின் கெளம்பப் போகுது போலாமா என, அப்போது ரஜினியின் கையைப் பிடித்துக் கொண்டு நீ போ அர்ஜூன் நாங்க சூர்யாவோட இருக்கோம் என்பார், ரஜினி முகத்தில் சந்தோசம், நெகிழ்சி, பாசம், சோகம் என அனைத்தும் கலந்து ஒரு எக்ஸ்ப்ரசன் காட்டுவார், அப்படியே பேக்ரௌண்டில் சூரியனைக் காட்டி , சின்னத்தாயவள் பாடலோடு படம் நிறைவு பெறும் , கிளாசான காட்சி........ இதை எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்று கணக்கே கிடையாது......

பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் என்றாலும் ராக்கம்மா கையத்தட்டு பாடல் உலக அளவில் பிபிசியில் பத்து மாதங்கள் தொடர்ந்து  முதலிடம் இருந்தது. இன்றளவும் காட்டுக் குயிலு பாடல் பல நண்பர்களுக்கான ரிங் டோனாக இருக்கிறது. இளையராஜா ரஜினிப் படங்களுக்கு அவ்வளவாக மியூசிக்கல் ட்ரீட் கொடுப்பதில்லை, என்னும் கருத்தை இந்தப் படம் உடைத்தெறிந்ததுடன், அதுவரையிலான இசை சாதனைகள் அனைத்தையும் முறியடித்தது.இன்னொன்று மம்முட்டி கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு, ஏனென்றால் இந்த படம் வெளிவரும் காலத்தில் அவர் கேரளாவின் சூப்பர் ஸ்டாராகிவிட்டார்.ரஜினி பாத்திரத்திற்கு சற்றும் குறையாத விதத்தில் இருக்கும்...இங்கு மம்முட்டி இறப்பது போலவும் மலையாள பதிப்பில்  ரஜினி இறப்பது போலவும் எடுத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டேன், அது குறித்து யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.....

படத்தின் வெற்றி குறித்து நான் சொல்லவே வேண்டியதில்லை. ரஜினி ரசிகர்களைக் கவர்ந்ததை விட சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த சில ரஜினிப் படங்களுள் தளபதிக்கு முதலிடம் வழங்கலாம். படம் வெள்ளி விழாக் கண்டது. இந்தப் படத்திலிருந்து ஒன்றை தெரிந்து கொள்ளலாம், ரஜினியும் இது மாதிரி  படங்களிலேயே நடித்து வந்திருந்தால்  இந்நேரம் நடிப்பிற்கு கமல் என்னும் நிலையும் மாறியிருந்திருக்கும்.....




பதிவு குறித்த உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்.....

16 comments:

  1. வணக்கம்
    தளபதி படம் எல்லோரையும் பொதுவாக கவரும்.... படம் குறித்து எழுதியமைக்குநன்றி.. நண்பரே..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், நீங்கள் சொல்வதும் உண்மை தான் எல்லாருக்குமே பிடித்த படம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  2. எனக்கும் மிகவும் பிடித்த படம் தளபதி! பாடல்கள், இசை, நடிப்பு, இயக்கம் என்று அனைத்தும் சிறப்பாக அமைந்த ஒரு படம்! சிலாகித்து எழுதிய விதம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் கருத்துக்கும், வருகைக்கும்..

      Delete
  3. நல்ல விமர்சனம். நான் இதுவரை பார்க்காத படம். ஏனோ தெரியவில்லை, மணிரத்தினத்தின் படங்கள் என்னை அவ்வளவு ஈர்ப்பது இல்லை. இந்த படம் நன்றாக ஓடிய படம் என்றும் கேள்வி பட்டேன். இதோடு வெளியே வந்த குணாவையும் நான் பார்கவில்லை என்பது கூடுதல் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. தளபதி படம் பார்க்கவில்லையா? ஆச்சர்யம் தான்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  4. ஒரு முறை (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம்)
    ஒரு நிசப்த இரவில் சின்னத் தாயவள் என்கிற பாடலின் பிரிலூட் ஒலித்தது... சில நிமிடங்களில் கிலியாகி பாடலை அனைத்தது நினைவில் வருகிறது..
    நல்ல பதிவு ஜெய் தொடர்க

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் சிலருக்கு அதன் ப்ரீலுட் பிடிப்பதில்லை ...உங்கள் நினைவுகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்..

      Delete
    2. வேறு சந்தர்பங்களில் அது எனுக்கு பிடித்தது...
      அன்றைய இரவில் அது கிலியைத் தந்தது.
      அப்புறம்
      இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
      நண்பர்களின் முகநூல் தகவல்கள்

      Delete
  5. தளபதி விமர்சனம் மூலமாக மலரும் நினைவுகளை கிளப்பி விட்டீர்கள்.
    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
  6. மணிரத்தினத்தின் படங்களிலேயே தி பெஸ்ட் என்று சொல்லக்கூடிய அளவு அப்படிப்பட்ட ஒரு நல்ல படம் அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் காட்சிகள் எல்லாமே சூப்பர் சீன்ஸ்........கமல் நடித்த நாயகனும் மணிரத்தினத்தின் நல்ல படம்தான் என்றாலும் தளபதி அதிலும் சூப்பர்.....நல்ல ;இடுகை தம்பி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் ஒரு இருவரிக்கதைக்கு எவ்வளவு அழகான திரைக்கதை.. சூப்பர் இல்ல.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  7. படிப்பவருக்கு அலுக்காத நடை..
    சொல் நேர்த்தி...
    கச்சிதமான வடிவம்..

    படம் பார்த்திருக்கிறேன்.
    எழுத்து மூலம் ஒவ்வொரு காட்சியையும் நினைவில் நீங்கள் மீண்டும் ஓட விட்டதை உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் “ செம“
    அருமையான பதிவு தோழரே,
    தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. எனக்கும் இந்தப் படம் ரொம்பவே பிடிக்கும்.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete