Tuesday, April 22, 2014

முதல் வாக்காளர்களின் வாக்கும் என்னுடைய கணிப்பும்!!


முதல் வாக்காளர்களின் வாக்கு!!!

இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு. பொதுமக்களுக்கு நிம்மதி. வேட்பாளர்களுக்கு இனிதான் கவலை. கொடுத்த காசு வேளை செய்யுமா? ஜெயித்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என யோசித்தே மண்டை வலி வரப்போகிறது வேட்பாளர்களுக்கு. இன்னொறு பிரச்சனையும் இருக்கிறது இந்த முதன் முறை வாக்காளர்களின் ஓட்டுகளைக் கவர்வது. ஆம் அதுவும் வெற்றியைத்தீர்மானிக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான ஓட்டுகள் கிடைக்கலாம். இந்த முறை முதன் முறை வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கணிசமாக கிடைக்கும் எனப் பார்ப்பது தான், பார்க்க முயல்வதுதான் இந்தப்பதிவு,

இளைஞர்கள் மத்தியில் முதல்முறை வாக்களிக்கப் போகும் உணர்வே அதிகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மற்றவர்கள் போல குறிப்பிட்ட இந்தக்கட்சிக்குத்தான் வாக்கு என்றெல்லாம் முடிவெடுத்து செல்வதில்லை வாக்காளர்கள். தீர்க்கமான முடிவு அறிவுசார்ந்த வேட்பாளர் தேர்வு என இளம் வாக்காளர்களின் வாக்கு அமையும் என்று கூட சொல்லலாம்.இன்றைய தேதியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இதைப் பற்றி மற்றவர்களுடன் விவாதித்துக்கூட முடிவெடுக்கின்றனர். உதாரணமாக என் நண்பர்களையே சொல்லலாம்.


ஆனால் எதை வைத்து வாக்களிக்க உள்ளனர் என்று பார்த்தால் முக்கியமாக‌ ஊடகத்தை பார்த்து தான் தேர்வு செய்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நமது இளைஞர்களின் ஓட்டு யாருக்கு என்று பார்க்கவேண்டும். அவை கூட கூடப் படிக்கும் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்ட ஒரு தேர்வாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. நான் பார்த்த பழகிய என் தோழர்கள் , என் பல்கலைக்கழக நண்பர்கள், என் விடுதி நண்பர்கள், என் ஊர் நண்பர்கள் யாவருமே புதிய வாக்களர்கள் தான் (நானுட்பட). அவர்களிடம் பல நேரங்களில் பேசியதிலிருந்து, அவர்களாகவே கூறியதிலிருந்து நான் கூற வருவதுதான் உண்மையாக இருக்கும் என்று கூறமுடியாது. சில இடங்களில் மாறலாம். ஆனால் பெரும்பான்மையாக இது தான் இருக்கிறது.


இன்றைய சூழலில் இளைஞர்களின் தேர்வாக இருப்பது கண்ணை மூடிக் கொள்ளுங்கள், மோடி மோடி மோடி தான். ஆம், என்ன காரணம் என்று பார்த்தால் ஊடகம். ஊடகங்களிம் மூலம் மோடிக்குக் கிடைத்த வெளிச்சம். இதில் தான் ஊடகங்கள் ஒருபக்கமாக இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
எப்போது மோடி பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அப்போதிலிருந்து நமோ கோசம் தான் எந்தப் பக்கத்தை புரட்டினாலும். இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீதான வெறுப்பு. இதை வெறுப்பு என்று கூட சொல்ல முடியாது, போதும் என்ற மனநிலை. அவர்களே ஆட்சி செய்யக்கூடாது. மாற்றித்தான் பார்க்கலாமே என்ற எண்ணம் தான்.மூன்றாவது முகப்புத்தகம் . அதில் செய்யப்படும் பிரச்சாரம், மோடி புகழுரைகள் போன்றவை. இன்னொன்று இன்றைய இளைஞர்கள் மக்களவை, சட்டசபை தேர்தலுக்கான வித்தியாசத்தையும் புரிந்துவைத்துள்ளனர்.


நான் பல முறை மோடி போடும் வேசத்தை என் நண்பர்களிடம் விளக்கும் போது, அவர்கள் கூறும் ஒரே பதில், பிறகெப்படி அவர் முன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார் என்பது தான். அவரின் வரலாற்று அறிவு, பொருளாதார சிந்தனை  உள்ளிட்டவற்றை மன்மோகனோடு ஒப்பிட்டால் கண்டிப்பாக மோடி சிறந்தவர் இல்லை தான். ஆனாலும் அவரின் குஜராத் வளர்ச்சி வித்தை, அவரை காப்பாற்றிவிடுகிறது.


இரண்டாவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் மன்மோகன் பெயர் மிகவும் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. இதுவும் ஊடகங்களைப் பார்த்து புரிந்துகொண்டதுதான் எனலாம். சோனியாவின் கைப்பாவை என தினமொறு செய்தியாகப் போட்டுப் போட்டு மன்மோகனை டேமேஜ் செய்துவிட்டன்ர்.  ராகுல் காந்திக்கு ஓரளவு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது. ஆனாலும் மோடியோயுடு ஒப்பிட்டக்கூட முடியாத அளவில் தான்.


தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை இளைஞர்களின் ஆதரவு திமுக ஆதிமுக வுக்கு சம‌மாக இருக்கிறது. கேப்டனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது, ஆனால் அது எவ்வாறு என நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சற்று அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மோடியின் பருப்பு வேகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில்  சிறுபான்மை இளைஞர்களிடமும் மோடி பெயர் வாங்க முடியவில்லை.

கலைஞர் பற்றிப் பார்த்தால் அவருடைய பெயரும் அவ்வளவாக இல்லை. குடும்ப அரசியல் , ஊழல் என அவர் பெயரும் டேமேஜ் தான். முதல்வரின் மீதும் நல்ல பார்வை இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, எழுதிவைத்துப் பேசுவது போன்றவைகளை தெரிந்தே வைத்துள்ளனர்.அதே நேரத்தில் லாப் டாப் திட்டத்தினால் ஓரளவு இளைஞர் ஆதரவு இல்லாமலும் இல்லை. வைகோவிற்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால் அது ஓட்டுகளாக மாறும் அளவிற்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் பற்றிய பார்வை அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. அதே போல ஜாதிக்கட்சிளுக்கான ஆதரவு துளியும் இல்லை இன்றைய இளைஞர்களிடம். பாராட்டப்படவேண்டிய விசய‌ம் தானே?அதே நேரம் படிப்பறிவில்லாத முத‌ல் வாக்காளர்களிடம் ஜாதி கொடிகட்டிப் பறக்கிறது என்பதும் உண்மை. நோட்டாவிற்கும் கூட ஆதரவு இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக பயன்படுத்த‌ மாட்டார்கள். 


மொத்தத்தில் இன்றைய இளைஞர்களின் ஆதரவு கீழ்கண்டவாறு இருக்கிறது.


முதல் இடம்; நரேந்திர மோடி

இரண்டாவது; கேப்டன் விஜயகாந்த் (விதிமுறைகளுக்கு உட்பட்டது)

மூன்றாவது இடம் ; முதல்வர் ஜெயலலிதா

நான்காவது இடம்; கலைஞர் 

ஐந்தாவது இடம்; நோட்டா

ஆறாவது இடம்; மன்மோகன் சிங்க் ( எதிர்மறை ஆதரவு)

ஏழாவது இடம்; வைகோ ( வாக்காக மாறுமா எனத்தெரியவில்லை, நல்ல பெயர் இருக்கிறது)


தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் என்னுடைய கணிப்பாக சில தொகுதிகளின் வெற்றி நிலவரம். ( என்னுடைய கணிப்பு மட்டுமே)

சிவகங்கை( என்னுடைய‌ தொகுதி) ;  அதிமுக ஜெயித்துவிடும் என்றே தெரிகிறது. இரண்டாவது இடம் திமுகவிற்கு கிடைக்கலாம். கார்த்தி சிதம்பரம் தோல்வி அடைந்தாலும் கவனிக்கத்தகுந்த வாக்குகளைப் பெறலாம். ஹெச்.ராஜாவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது.


கன்னியாகுமரி;  பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றியடைவார் எனத்தெரிகிறது.காங்கிரஸ் வசந்த குமார் கவனிக்கத் தகுந்த வாக்குகளைப் பெறலாம்.

விருதுநகர்; வைகோ வென்றுவிடுவார் எனத் தோன்றுகிறது. ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் எனப்படுகிறது.


நீலகிரி; திமுக ராஜா ஜெயிப்பார்.

மத்தியசென்னை; தயாநிதி மாறனுக்கு வாய்ப்புகள் அதிகம்.

தென்காசி; புதிய தமிழகம் கட்சிக்கே அதிக வாய்ப்பு.

சிதம்பரம்; விசிக்கு வாய்ப்பிருக்கிறது.

தஞ்சாவூர்; திமுக மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்.

புதுச்சேரி; என். ஆர் காங்கிரஸ் ஜெயிக்க அதிக வாய்ப்பு, காங்கிரஸுக்கும் வாய்ப்பு அதிகம்.

அவ்வளவு தான் என்னுடைய கணிப்பு. மொத்தமாக அதிமுக  18-20 தொகுதிகள்.திமுக 16-18 பாஜக -1 மதிமுக -1 பாமக 0-1 தேமுதிக 0 தொகுதிகள் ஜெயிக்கலாம்.(பாவம் கேப்டனின் அரசியல் வாழ்க்கை இத்தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகப் போகிறது எனத்தெரியவில்லை)

இது பற்றிய என்னுடைய பதிவு;  http://pudhukaiseelan.blogspot.in/2014/04/blog-post_17.html


வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒருகணம் ஒதுக்கலாமே?

உங்கள் சீலன்!

கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!







4 comments:

  1. ”ஜாதிக்கட்சிளுக்கான ஆதரவு துளியும் இல்லை இன்றைய இளைஞர்களிடம். பாராட்டப்படவேண்டிய விசய‌ம் தானே?” - மிகப் பெரிய நல்ல விசயம் சீலன்! அதோடு, முதல்தலைமுறை வாக்காளரான நீங்கள் இந்த அளவிற்கு அரசியலில் கவனமெடுத்து அலசியிருப்பதை நான் பெரிதும் பாராட்டுகிறேன். உங்களின் சில கணிப்புகள் தவறாக வாய்ப்பிருந்தாலும், கணித்த உங்களின் ஒப்பீட்டு திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தொடர்ந்து எழுதுங்கள் இந்தத் தேர்த்ல் முடிந்ததும் இலக்கியத்தின் பக்கமும் வாருங்கள். எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உங்களின் சுயவிவரக் குறிப்பில் பார்த்து புதுகை ரவியின் தளத்தையும் தொடர்கிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தேர்தல் முடிந்தவுடன் கண்டிப்பாக பழைய படி பதிவுகளுக்குத் திரும்பிவிடுவேன் ஐயா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்!!

      Delete
  2. நல்ல பதிவு ஜெயசீலன். ஜாதிகட்சிகள் ஆதரவு, ஜாதி அரசியல் ஒழிக்கப் படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    என்னுடைய கணிப்பும் தங்களது போலவே, இருந்தாலும் மே பதினாறாம் தேதி தெரிந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா மே 16 ல் தெரிஞ்சிக்கலாம். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்...

      Delete