Wednesday, March 12, 2014

என்னுடைய ஓட்டு ?




நான் பிறந்தது, வளர்வது எல்லாமே புதுக்கோட்டை மண்ணில் தான். ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த ஊர், நாடு,தாய் மொழி மேல் பற்று இருப்பது போலத்தான் எனக்கும். 



புதுக்கோட்டை நகருக்கும்,சமஸ்தானத்திற்கும் தனி வரலாறே உண்டு என்பது நூற்றாண்டு கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நேரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

                                         TN Districts Pudukkottai.gif




சுதந்திரம் அடைந்த பின் இந்தியத் திரு நாட்டுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை தான். 1912 ம் ஆண்டிலேயே நகராட்சியாகிய நமது நகரம் தொடர்ந்து அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு வருவது உண்மைதானா என ஆராயும் போது, ஆம் ஓரளவு உண்மைதான் என்று தோன்றுகிறது.

1948 ல் தனி சமஸ்தானமாக இணைந்த புதுகை, 1974ம் ஆண்டில் தான் தனி மாவட்ட அந்தஸ்தே அடந்தது. அதே போல 1988 ம் ஆண்டில் தான் தேர்வுனிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

                        படிமம்:Pudukkottai taluks.gif



ஆங்கிலேயர் காலத்தில் தனி சமஸ்தான அந்தஸ்துடன் திகழ்ந்த பெருமையுடையது புதுக்கோட்டை. கடந்த 1912 -ம் ஆண்டு அப்போதைய சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது. சமஸ்தானத்தில் இருந்த ஒரே நகராட்சியும் இதுதான். அப்போது நகரசபைக்கு 18 உறுப்பினர்கள் இருந்தனர்.

தொடக்ககாலத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்த நிலையில், 1949 -ல் இரண்டாம் நிலைக்கும், 1963 -ல் முதல் நிலை நகராட்சியாகவும், 23.3.1988 -ல் தேர்வு நிலை நகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்ந்தது. இதையடுத்து கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்குமுன் புதுக்கோட்டை ஊராட்சி நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் தற்போது  நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,  நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 10 கோடியும், ஒரு லட்சத்துக் மேலான மக்கள் தொகையும் இருந்தால் அந்த நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயர்த்தலாம் என்பது அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பே  புதுக்கோட்டை நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 10 கோடியாகவும்,  வரவு, செலவுத்திட்டம் ரூ. 16 கோடியாகவும், மக்கள்தொகை ஏறத்தாழ 2  லட்சத்துக்கு மேலாகவும்  அதிகரித்த நிலையில், இன்னும் சிறப்புநிலைக்கு அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படாதது ஏன் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்து நிற்கிறது.

சிறப்பு நிலை தகுதி நிலைக்கு உயர்ந்தால்  மொத்த நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கும், குடிநீர், சாலைகள் , தெருவிளக்குகள் ஆகிய பிரிவுகளுக்கு தற்போதுள்ள ஓவர்சீயர் பதவி தகுதி உதவி பொறியாளர் நிலையில் தனி பதவியிடங்கள் கிடைக்கும்,  நகராட்சி ஆணையர் தகுதி கோட்டாட்சியர் பதவி தகுதியில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தகுதிக்கு உயரும், இதனால் அனுபவமிக்க மூத்த அதிகாரிகள் மட்டுமே இப்பதவிக்கு வர முடியும், அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை உயரும். மேலும் ரூ 30 கோடி வரையிலான திட்டங்களை நகராட்சி நிர்வாகமே சுயமாக மேற்கொள்வது,  மத்திய அரசின் நிதி, கூடுதல் மானியங்கள் போன்ற  நன்மைகள் கிடைக்கும்.  இந்நிலையில், கடந்த 1988 -ல் தேர்வு நிலை நகராட்சியானபின் சுமார் 25 ஆண்டுகளாக சிறப்பு நிலைக்கு உயர்த்தப்படாமல் இருக்கும் ஒரே நகராட்சி புதுக்கோட்டை மட்டும்தான் என்றால் வியப்பில்லை. நன்றி - தினமணி 



நமது அருகிலுள்ள காரைக்குடி இன்று சிறப்பு நிலை நகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் மக்கள்தொகை 88000(2001 கணக்கின் படி), நமது நகரத்தின் மக்கள் தொகை 1.3 லட்சம் அதே 2001‍ கணக்கின்படி. இவை மட்டுமல்ல, இன்னும் பலவிததில் காணா நகராகவே இருக்கிறது நம் நகரம் .
                               


                                          



இந்தியாவிலேயே முதன் முதல் பெண் மருத்துவர் பிறந்த மண்ணில் ஒரு 
மருத்துவப் பல்கலைக்கழகம் கூட கிடையாது. மருத்துவப் பல்கலை கூட வேண்டாம் ஒரு அரசுப் பல்கலையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட‌ நகரக் கட்டுமானத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் புதுக்கோட்டையில் இல்லை என்பது வேதனையான விசயம் தான்.


எல்லாவற்றுக்கும் மேலாக 1951 முதல் நமக்கு என இருந்து வந்த மக்களவைத் தொகுதிக்கான உரிமையும் கடந்த 2009ல் பறிக்கப்பட்டது தான் வேதனையிலும் வேதனை.

அப்போது நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நமது மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆம் படிவம் நிரப்பி பல வேலை முடித்து வாக்களிக்கக்கூடிய 49 ஓ ஓட்டு 14000  அருகில் விழுந்து ஒரு தேசியக்கட்சியின்( இன்னும் ஏன் பயப்பட வேண்டும் காங்கிரஸ் )  வெற்றியையே தட்டிப்பறித்த வரலாறு நிகழ்ந்தது. இல்லை நிகழ்த்தப்பட்டது !

அதைக்ககண்டும் அஞ்சாத மத்திய அரசு மக்களவை தொகுதிகளையே அந்தந்த மாவட்டத்  தலைநகராக்க வேண்டும் என்று கூறியது. (வீரப்ப மொய்லி ) நல்ல வேலை அது நிராகரிக்கப்பட்டது, இல்லையெனில் நமது மாவட்ட அந்தஸ்தும் பறிபோய் இருக்கும்.



                                                 



இப்படி சுதந்திர வரலாற்றில் நாம் எத்தனை காலம்தான் புறக்கணிக்கப்படுவோம்? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? இந்த பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கவனத்தையும், அரசுகளின் கவனத்தையும், அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தால் தான் நாம் நமது உரிமைகளை பெறமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து!

படிவம் நிரப்பி, பல வேலை முடித்து 49 ஒ ஓட்டுப் போடும் முறையை மாற்றி எளிதாக நோட்டா வாக்களிக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கியுள்ளது.


நமக்கான உரிமையைப் பெற நாம் பயன்படுத்த‌ப்போகும் உரிமை நோட்டா. நான் இந்த தேர்தலில் தான் முதன்முறையாக வாக்களிக்க உள்ளேன். யாருக்கு ஓட்டுப் பொடுவேன் என்பது உங்களுக்கே தெரியும். நமது மாவட்டத்திலுள்ள 15 லட்சம் வாக்காளர்களும் போடப்போகும் ஓட்டு!!!!!!!!!!!! ஆம்!!!!!!


அப்போது தான் 2015ல் அமைக்க இருக்கும் தொகுதி மறுசீரமைப்பின் குழுவிற்கு நமது எதிர்ப்பை தெரிவிக்க முடியும் என்பது என் கருத்து. மாற்றுக்கருத்துகள் வறவேற்கப்படுகின்றன.  மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்!


                                     ‍----உங்கள் புதுகை சீலன்!!!!
















7 comments:

  1. நல்லதொரு முடிவு - அனைவருக்கும்...!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா! தொடர்ந்து வர வேண்டுகிறேன்!!!

    ReplyDelete
  3. //நமது அருகிலுள்ள காரைக்குடி இன்று சிறப்பு நிலை நகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.// அதுவேற கணக்கு சகோ! நீங்க தமிழக பொருளாதாரம் படிக்கணும் .
    but உங்க கட்டுரை யை படிச்சதும் நம் மாவட்டதிற்காக நாம பெருமைபட்டுக்கலாம் சகோ! அருமை

    ReplyDelete
  4. //அதுவேற கணக்கு சகோ! நீங்க தமிழக பொருளாதாரம் படிக்கணும் .//

    அது என்ன கணக்குனு தெரிஞ்சிக்கலாமா சகோ ??

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவே தெரியாம கேட்குறீங்களா!?
      தமிழக அம்பானிகள் வாழும் இடம் அல்லவே!
      அங்கே பணம் பத்தும் செய்கிறது என்பதை சொன்னேன்!

      Delete
    2. ஓ அதை சொல்கிறீர்களா, அதானே பார்த்தேன்.. சரியாகச்சொன்னீர்கள் சகோ!
      நன்றி!

      Delete
  5. நல்ல முடிவு....
    தேவகோட்டையும் முதல் நகராட்சி என்றாலும் இன்னும் அப்படியே... எங்கள் தொகுதியும் இப்போது காரைக்குடியுடன்...

    ReplyDelete