Wednesday, November 25, 2015

ஃபேஸ்புக் கவிதைகள்-1


முகப்புத்தகத்தில் நான் எழுதியவைகள்....! ( கிறுக்கியவைகள் ) 


உண்மைதானே....?



1. நாம் நினைப்பவர்கள் எப்பொழுதாவது நம்மை 

நினைப்பவர்களாகஇருப்பார்களா என 

யோசிக்காமல் இருக்கமுடிவதில்லை.......!


Tuesday, February 17, 2015

ரஜினி ! ‍ அரசியலா ? அடுத்த படமா ?



                     
ரஜினி !  ‍ அரசியலா ? அடுத்த படமா ?



இரண்டு நாள் முன்னர் லிங்கா பிரச்சனையின் பிரஸ்மீட் வீடியோவை சமூக வலைத் தளங்களில் காண நேர்ந்தது.என்னடா உண்ணாவிரதம் இருந்தவர்களை இடையில் ஆளைக் காணோமே என்று பார்த்தேன். இதோ இருக்கிறோம் என அடுத்த ரவுண்ட் கிளம்பிவிட்டார்கள்.ஆமாம் இப்போ பிச்சை எடுக்கும் போராட்டமாம்.(இவ்வளவு நாளாமட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்களாம்) தொடக்கத்திலிருந்தே இந்த பிரச்சனையின் சாராம்சம் எனக்குப் புரியாமலில்லை.இருந்தாலும் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என இத்தனை நாள் இது பற்றி நான் வாயே திறக்கவில்லை.

முதலில் படம் வெளியான மூன்றாவது நாளே படம் சரியில்லை ,ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா,ரஜினிக்கெல்லாம் மாஸ் குறைந்துவிட்டது,அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்று ஒருவர் கிளம்பினார். பெயர் சிங்காரவேலனாம்.அவருக்குமுக்கியத்துவம் அளித்து அவரை வளர்த்துவிட்டது இந்த நடுநிலை ? ஊடகங்கள்.அதற்கடுத்து பல காட்சிகள் அரங்கேறின. கன்னடர் என்றார்கள்,தமிழருக்கு துரோகம் என்றார்கள்,அவர் என்ன பெரிய ..... என்று கூட கேட்டார்கள்.அதெல்லாம் நமக்கு தெரிந்த கதை தான்.உண்ணாவிரத  போராட்டத்துக்கு சீமான்,வேல்முருகன் போன்றவர்கள் வரும்போதே அவர்களுடைய சாயம் வெளுத்துப் போனது. நேற்றைக்கு ஒரு பிரஸ் மீட் . இப்போது தான் வெளிப்படையாகவே புரிகிறது. அவர்களுடைய டார்கெட் ரஜினிகாந்த் என்பது.



அந்த சிங்கு சொல்கிறார், தமிழகத்தில் லிங்கா படத்தைப் பார்த்தவர்கள் மொத்தமே 40 லட்சம் பேர் தானாம். இதிலிருந்தே அவர்களின் அண்டப் புளுகு வெளியே வந்துவிட்டது.

முதல் நாள் இரவுக்காட்சி என் நண்பர்களுடன் ராம் தியேட்டருக்கு சற்று நேரமாகியே சென்றோம். ( மூன்று தியேட்டர்: ராம்முத்துராம்,பேரின்பவிலாஸ்,பாம்பே ரிலீஸ் என்பதால்  ) ராம் தியேட்டரில் டிக்கெட் இல்லை. ஒருடிக்கெட் 250 ரூபாய் என்பதும் கவனிக்கத்தக்கது. அடுத்து அவசர அவசரமாக பேரின்பவிலாஸ் சென்றோம். அங்கே இருந்த டூவீலர்களை பார்த்து நான் மயங்கி விழாத குறைதான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி( டிக்கெட் விலை 200) உள்ளே போனால் அங்கே தியேட்டரே புல். முன் வரிசை மட்டுமே இருந்தது. மூன்று தியேட்டர்களிலும் நள்ளிரவு 12 மணியிலிருந்து நாளொன்றுக்கு 6 காட்சிகள் முதல் மூன்று நாடகள். மூன்று தியேட்டர்களின் குறைந்தபட்ச‌ இருக்கை 1500 என்று வைத்துக் கொண்டாலும் 1500*6 = 9000 பேர் ஒரு நாள். 27000 பேர் மூன்று நாள். ஒரு டிக்கெட் 200 என்றாலும் 54 லட்சம் திருனெல்வேலி நகரில் மட்டும். இதே போல தமிழகம் முழுதும் 600க்கும் மேற்பட்ட திரைகளில் லிங்கா ரிலீஸ். நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். கோவை ஏரியாவில் மட்டும் 40 லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கணக்கு தமிழகம் முழுதும் 40 லட்சம் பேராம். இந்த சிறிய கணக்கீட்டிலேயே எவ்வளவு பெரிய பித்தலாட்டம் நடைபெற்றிருக்கிறது என யூகிக்கலாம்.

சரி அடுத்த பிரச்சனைக்கு வருவோம். உண்ணா விரதம் இருந்த பின்பு அமைதியாகிவிட்டார்கள். இடையில் ரஜினி திருப்பூர் சுப்பிரமணியத்தை பொறுப்பாளராக நியமித்து நஸ்ட ஈடு தரப்போவதாக சொன்னார்கள். ஆனால் இவர்கள் கொடுத்த 40 லட்சம் கணக்குப் பார்த்து இவர்களின் வண்டவாளங்களை புரிந்து கொண்டு அமைதியாகிவிட்டனர் போல.சரி படம் ஓடவில்லை. நஸ்டம். அப்போ யாரிடம் நஸ்ட ஈடு கேட்க வேண்டும். இவர்கள் யாரிடம் வாங்கினார்களோ அவர்களிடம் தானே. அதாவது வேந்தர் மூவீஸிடம், வேந்தர் மூவீஸ் ஈராஸிடம், ஈராஸ் தயாரிப்பாளரிடம். ஆனால் இதில் ரஜினி எங்கேயிருந்து வந்தார் ?? அரசியல்வியாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?


இந்த கூட்டுப் பிச்சைக்காரர்களின்  பிச்சை எடுக்கும் போராட்ட அறிவிப்பின் பத்திரிக்கை செய்தியைப் படிக்கும் யாருக்கும் கோபம் வரும். அப்படியானால் ரஜினி ரசிகன் ?? கோபத்தின் உச்ச  கட்டத்தை அடைவான்.

"ரஜினி படத்தை வாங்கினால் பிச்சை தான் எடுக்க வேண்டுமாம்" அத்தோடு நிற்கவில்லை "ரஜினியை நம்பும் பொதுமக்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டுமாம்"  இங்கு தான் இடிக்கிறது. இங்கே எதற்காக மக்கள் வருகிறார்கள்? மக்கள் ஏன் ரஜினியை நம்ம்புகிறார்கள் ??


முகப்புத்தகத்தில் ரஜினி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அக்கவுண்டையே டெலிட் செய்துவிட்டு ஓடிய சிங்காரவேலனுக்கு, ரஜினியின் மனம் புண்படும் படி பேசியிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாய் பிரஸ்மீட்டில் பம்மிய இந்த சிங்கார வேலனுக்கு இந்த ஒரு மாத இடைவெளியில் எங்கே இருந்து இவ்வளவு தைரியம் வந்தது.அதுவும் ரஜினியின் இமேஜின் அடிச்செங்கலை ஆட்டம் காணச் செய்யுமளவுக்கு அறிக்கை தயார் செய்ய எங்கிருந்து பலம் வந்தது.

அது தான் அரசியல். இடையில் ரஜினி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_சங்கர் படம் குறித்தான செய்திகள் வந்த போது அமைதியான இந்த பிச்சைக்கார கூட்டம் இப்போது மீண்டும் கிளம்பியிருப்பது அதுவும் வலுவுடன் கிளம்பியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

மொத்தத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசன்மென்ட் ரஜினியினுடைய செல்வாக்கை அசைப்பது அல்லது முற்றிலும் பெயர்ப்பது. எதற்காக? ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ரஜினியின் அரசியல் பிரவேச நினைப்பை மழுங்கடிக்க மக்கள் மத்தியில் மறக்கடிக்க. இனவாதம் பேசி ரஜினியை தாழ்த்த முயன்று தோற்ற கூட்டம் இன்று ஈனவாதம் பேசி வெல்ல நினைக்கிறது.இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் ஆட்டமே அடங்கியிருக்கிறது.

பிச்சையெடுக்கும் போராட்டத்தை ரஜினியின் வீட்டு வாசலிலிருந்து தொடங்கப் போகிறார்களாம். இதற்கு முதல் பிச்சை போட்டு தொடங்க இருப்பவர் பெரிய அரசியல் புள்ளியாம். அது ராமதாஸ் என்று சந்தேகம் கிளப்புகிறது தி இந்து தமிழ் நாளிதழ். நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு பிச்சையெடு. அது கேள்வியல்ல ரஜினியை இழுக்கக் காரணம் என்ன ? அப்படியே இழுத்தாலும் அவர் மீதான விமர்சனப் பார்வைகளும் போராட்ட வாசகங்களும் எதற்காக?


தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள ரஜினிக்கு இது தான் இறுதியான வாய்ப்பு. ஒரு வாதத்துக்காகவேணும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் அவரை எதிர்க்கப் போவது ஏறத்தாழ எல்லாக் கட்சிகளுமே தான். பா.ஜ.க தவிர !! வார்த்தை வசை பொழியப் போவது ராமதாஸும்,சீமானும் , வேல்முருகனும் தான். இம்மூவருமே இந்த பிரச்சனையில் வெளிப்படையாக ஆதரவளித்துள்ளனர். பின்னால் இருப்பது யாரோ ?? அது ஊரறிந்த ரகசியம்.

ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் ஜெயிக்கிறார் தோற்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவருக்கான ஓப்பனிங் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அவர் படத்திற்கு கிடைக்கும் அளவு அந்த பிரம்மாண்ட ஓப்பனிங்கை ஓட்டாக்குவது அவருடைய சாமர்த்தியம் சார்ந்தது. அர்சியல் சார்ந்தது. ஆனால் அந்த ஓப்பனிங் கூட இருக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல அவர் அரசியல் பக்கமே திரும்பக் கூடாது என்பதற்கான நேரடி எச்சரிக்கை தான் இந்த பிரச்சனையின் உள்நோக்கம்.

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார், " ரஜினியை கூட இருந்து பார்த்துப் பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன் , அவர் அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி " என்று. இது ஏதோ படம் வெளியாகும் சம்யத்தில் பப்ளிசிட்டி தேட சொன்னதல்ல. படம் வெளியாகி பிரச்சனை கிளம்பி பெட்டிக்கு திரும்பியவுடன் சொன்ன செய்தி.

இனிமேலும் தான் அரசியலுக்கு வருவேன் என்ற பூச்சாண்டியைக் காட்ட தயாரில்லை என்பதைத்தான் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ஓரளவு வெளிப்படையாகவே குறிப்பிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்ற காலம் போய் நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை. தயங்குகிறேன் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். ஆக அரசியல் ஆசை ரஜினிக்கு இல்லாமலும் இல்லை.



இன்னொன்று ரஜினியின் மேலான பெரிய தவறு, தன்னுடைய பலத்தையும் செல்வாக்கையும் இந்த உலகத்திற்கு காட்டவே இல்லை. குறைந்தபட்சம் காட்டுவதற்கு முயற்சி கூட செய்யவில்லை.1996, 2002 காவிரி உண்ணாவிரத போராட்டம் இந்த நிகழ்சிகளுக்குப் பின்பு ரஜினியின் செல்வாக்கு ஒரு முறையும் சோதித்தறியப்படவில்லை.யார் யாரோ தங்களுக்கு செல்வாக்கே இல்லை என்றாலும் தேடிப் போய் பிரதமர் வேட்பாளரை சந்திப்பது,காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது என தங்கள் இமேஜை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறார்க‌ள். ஆனால் ரஜினி அதை செய்யவில்லை. தன்னுடைய செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்று நம்புகிறார். இல்லை , கூட இருப்பவர்களால் நம்ப வைக்கப் படுகிறார்.இது தான் அவரின் அரசியல் நினைப்புக்கு முட்டுக்கட்டை போடும் மிகப்பெரிய சவால். அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் ஒரு ரசிகர் மன்ற மாநாடு நடத்தக்கூட முயற்சி செய்யவில்லை.  சந்திரமுகி திரைப்பட விழாவிலிருந்து ரசிகர்கள் சார்பாக வைக்கப்படும் கோரிக்கை ரசிகர் மன்ற மாநாடு. அதை ஒவ்வொரு பட விழாவிலும் அவரே சொல்வார். பின்னர் அமைதியாகிவிடுவார். இது அவருடைய பெரிய பல்வீனம் என்றே சொல்லலாம்.

சரி இப்போது ரஜினி செய்ய வேண்டியது என்ன.? ஒரு வேளை அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவித்தால் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். அடுத்த படம் சங்கருடனோ இல்லை யாருடனோ என அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வந்தாலே போதும், இந்த போராட்டக் காரர்களுக்கு அது தான் வேண்டும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது ஆவ்வளவு தான்.

அது எப்படி ? எனச் சந்தேகம் எழுந்தால் நீங்கள் இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறீர்கள் என அர்த்தம். அதாவது அடுத்த படம் அறிவித்தால் அதை முடிக்க குறைந்தபட்சம் 1 வருடம் . சங்கர் படம் என்றால் 2 வருடம் கூட ஆகலாம். அப்போ எங்கிட்டு அரசியலுக்கு வருவது. 2016ல் தேர்தல். நீங்கள் நினைக்கலால் 2021 இருக்கிறது என்று. அப்போ , "வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன அந்த ரேஞ்ச் ஆயிறும்". அதாவது அப்போ அவர் வயது 70 ஐ தாண்டிவிடும். இப்போது புரிகிறதா ? எதற்காக இந்த அளவு ரஜினியின் மீது அவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று.


சரி அடுத்த படம் அறிவித்து பிரச்சனையிலிருந்து தற்காலிகமாக தப்பிவிடலாம் என்று நினைத்தால் அங்கே தான் ரஜினிக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது. ஆம், ஒரு வேளை ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வந்தால் இத்தனை ஆண்டுகாலம் அவர் கட்டிக்காத்து வந்த மக்கள் செல்வாக்கு, ஒரே ஒரு கேள்வியில் தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்.


இத்தனை ஆண்டுகாலம் உங்கள் சுயநலத்திற்காகத்தானே அரசியல் பூச்சாண்டி காட்டினீர்கள் என்ற , இந்த கேள்வி தான் அது. இன்னொரு படம் நடித்து அது ஓடினாலும் ஓடாவிட்டாலும் திரையுலகின் இன்னொரு சிவாஜியாக வலம் வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். ரசிகர்களுக்கு அவர் மீதிருந்த அத்தனை அபிப்ராயங்களும் தளர்ந்து அவரும் ஒரு சராசரி நடிகர் என்ற நிலைக்கு தாழ்ந்துவிடும் அபாயம் கூட நிகழலாம். எனவே தன் செலவாக்கை தக்க வைக்க வேண்டுமானால் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் ஊடகங்களோ இல்லை அவரின் ரசிகர்களோ இல்லை. முழுக்க முழுக்க அவரே காரணம். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்திருந்தால் இந்நேரம் இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்க மாட்டார்,கமலஹாசன் போல படம் நடித்துக் கொண்டிருப்பார். அவருடைய ரசிகர்களும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பர். அதை விடுத்து அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி அவருக்காக செலவு செய்து நொடித்த ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.அது ரஜினிக்கும் தெரியும். அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது அரசியலுக்கு வருவது தான் ஒரே வழி.

சமீபத்திய இவரின் மௌனமும் இதையே தான் காட்டுகின்றதென நான் நினைக்கிறேன்.இதில் எனக்கு இருவர் மீது வருத்தம்.

ஒன்று ஊடகங்கள். அவர்கள் கொடுக்கும் செய்தியை அப்படியே வெளியிடுகின்றன. நேற்றும் கூட "ரஜினியை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும்"  என்ற வாசகம் உடபட அப்படியே பிரிண்டிட்டிருக்கிறார்கள். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் அவர்களிம் எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறிய செய்தி வரவே இல்லை.  அவர்களின் உண்மை முகத்தை காட்ட யாருக்கும் தைரியமில்லையா ? இல்லை வர வேண்டியது வந்துவிட்டதா ?? இது தான் நடுநிலை ஊடகங்களின் செயல்பாடு. சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் சொல்லத் திராணி இல்லாத சிங்காரவேலன் & கோ வை அசைக்கக்கூடிய சக்தி இந்த தமிழ்நாட்டு ஊடகங்கள் எதற்குமே இல்லையா???

வேல்முருகன் கூறுகிறார் இதை இப்படியே விடாமல் தமிழ் சக்திகளை ஒன்றினைத்து மாநிலந்தழுவிய போராட்டத்தை முன்னெடுக்குமாம். வெட்கமாக இல்லை எனக் கேட்க வேண்டிய ஊடகங்கள் அதையும் கொட்டை எழுத்திஉல் அச்சிட்டு அனுப்புகின்றன.





இன்னொரு கோபம் ரஜினி ரசிகர்கள் மீது. ஆம் தங்கள் அபிமான நடிகரைக் கொச்சைப்படுத்தும் இவர்களை எதிர்த்து எந்த ஒரு ரஜினி மன்றமும் போராட்டம் நடத்தவில்லை. குறைந்தபட்சம் கண்டண அறிக்கைகள் கூட வரவில்லை. 1996ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002 ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011ல் தங்கள் தலைவனுக்காக கோவில் கோவிலாக அலைந்தவர்கள்  திராணி இவ்வளவுதானா?? எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால் தான் அந்தக் கூட்டம்  இப்படி ஆட்டம் போடுகிறது. இல்லை மேலிட உத்தரவின் பேரில் அமைதி காக்கின்றனரா ?? எனக்குப் புரியவில்லை. தங்களின் பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான்,  செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம்.


ரஜினியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் ,

தலைவா பொறுத்ததெல்லாம் போதும், பொங்கியெழு..... உன்னைப் பற்றி தப்புக்கணக்கு போடும் போலிகளுக்கு உன் ஆறாவது முகத்தைக் காட்டு.

தலைமையே இல்லாத தமிழகத்துக்கு தலைமை ஏற்க வா !! இனி நீ அமைதி காக்கும் ஒவ்வொரு நாளும் உனக்கெதிரான சதிவலை பெரிதாகி பெரிதாகி உன்னையும் எங்களையும் வரலாற்றிலிருந்தே மறைத்துவிடும். அந்த அளவு வீரியத்துடன் பின்னப்படும் அச்சதிவலையை அறுக்க உன் ஒரு வார்த்தை போதும். அந்த ஒருவார்த்தை தமிழக அரசியலையே திருப்பிப் போடும். ஆம் அது  மாநாட்டுத் தேதி.......


அது அரசியல் கட்சி துவக்க விழா மாநாடோ , இல்லை சாதாரண ரசிகர் மன்ற மாநாடோ, மேடையில் நீ  நின்று எங்கள் மத்தியில் நீ உதிர்க்கும் அந்த புன்னகையைக்  காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோடிக் கண்களில் ஒரு ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருக்கும். அந்த அறிவிப்பு நம் கட்சியின் பெயராக இருந்தாலும் சரி நம் அடுத்த படத்தின் பெயராக இருந்தாலும் சரி வெற்றி பெற வைக்க என்னுடைய இரு கரங்களும் காத்திருக்கின்றன.


பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???


பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???

என்ன சொல்லிவிட்டார் ? 20 வருடமாக சொல்வதைத் தான் சொல்லிவிட்டார்.. அதற்கு இந்த அளவு கேவலமாக விமர்சனங்களை வைக்க என்ன அவசியம் இருக்கிறது. நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்று இந்நேரம் புரிந்திருக்கும். ஆம் ரஜினி. என்ன பாவம் செய்தாறோ அவர் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலாகிவிடுகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த லிங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை தான் பலத்த அரசியலுக்கு விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. அவர் ஒன்றும் தானாக முன்வந்து அரசியல் பேசவில்லை. சேரன்,அமீர், வைரமுத்து,விஜய குமார் போன்ற திரைஉலகப் பிரபலங்கள் பேசியதற்கு பதில் அளித்தார் அவ்வளவுதான். ஒரு வேளை அவர் பதிலளிக்காமல் போயிருந்தால் அதையும் செய்தியாக்கி அவரை விமர்சிக்காமல் இருந்திருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் விடை. ஆம் அவர்களுக்குத் தேவை ரஜினியை விமர்சித்து தங்கள் பிரப்ல்யத்தையும் டீஆர்பி ரேட்டிங்கையும் அரசியலில் தங்கள் இருப்பையும் மீடியாக்களின் கவனத்தையும் பெறவேண்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் . இது தான் அவர்களுக்கான தேவை.


சரி விழாவில் என்ன நடந்தது என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கான் என் பதில்களை தர விரும்புகிறேன். விழாவில் பேசிய அனைவரும் ரஜினியின் நலம் விரும்பிகள் என்பதைத் தாண்டி ரஜினியின் தீவிர ரசிகர்கள். ஒரு சராசரி ரஜினி ரசிகன் மேடையில் பேசியிருந்தால் என்ன பேசியிருப்பானோ அதைத் தான் சேரனும்,அமீரும்,விஜயகுமாரும் பேசினார்கள். அமீர் , தலைவர் என்று ஒருவரை நான் ஏற்றுக்கொண்டது உங்களை மட்டு தான், நீங்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று கூறியதும் எழுந்த ஆரவாரமும் கைதட்டல் விசில் சத்தமு அடங்க சரியாக இரண்டரை நிமிடம் தேவைப்பட்டது. ஆம் அது என்னுடைய ஆசைமட்டுமல்ல, இங்கிருக்கும் 2000 பேரின் ஆசை மட்டுமல்ல தமிழர்கள் அத்தனை பேருடைய ஆசைகளும் தான். நீங்கள் பார்க்காத விமர்சனங்கள் இல்லை, இனியும் உங்களை விமர்சிக்காமல் இருக்கப்ப்போவதும் இல்லை. அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு அறிவிப்பு மட்டும் வெளிவிடுங்கள் நாங்கள் அனைவரும் அப்படியே உங்கள் பின்னால் வந்துவிடுகிறோம். என்று டைரக்டர் அமீராக அல்ல ஒரு ரசிகனாக பேசினார். சேரன் காந்தி காமராஜருக்கு பிறகு நாங்கள் உங்கள் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறோம், என அவரும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.



இறுதியில் பேசிய ரஜினி வழக்கமான் பேச்சுகளுக்குப் பிறகு, அவர்களுக்கான  பதிலை அளிக்க வேண்டியிருந்தது. அவர், அமீர், சேரன், விஜயகுமார் போன்றவர்கள் அரசியல் பேசியதால் நான் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவன் தலைக்கணம் பிடித்தவன் என்று சொல்வார்கள். அரசியல் என்றால் என்ன, அதனுடைய ஆழம் என்ன , அங்கு எப்படிப் போகவேண்டும் என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அப்படிப் போனால் அங்கு நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்ற தயக்கம் எனக்கிருக்கிறது. அரசியலை நினைத்து பயப்படவில்லை. தயங்குகிறேன் அவ்வளவுதான். ஒரு சூழ்னிலை தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கிறது, அதே சூழ்னிலை தான் என்னை அங்கும் கொண்டுபோக வேண்டும்...என்னடா இவன் இதையே சொல்றான் அடப் போய்யா என்று சொல்வார்கள், ஆனால் அது தான் உண்மை என்று பேசினார்.


இது தான் ஊடகங்களுக்கும் நடுநிலை என்ற போர்வையில் திரியும் சில மனிதர்களுக்கும் பெரிய தீனியாக அமைந்துவிட்டது. தந்தி டிவி விவாதத்தில் பங்கேற்ற மனுஸ்யப்புத்திரன்  ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது எனப் பொங்கி எழுகிறார். தமிழர்களுடைய எந்தப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார் என்று சொன்னதும் நிகழ்சி நடத்திய பாண்டேவுக்கே கோபம் வந்துவிட்டது. அவர் குரல் கொடுக்காத பெரிய பிரச்சனை எது என திருப்பி கேட்டார், அதற்கு மனுஸ் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒருநாள் உண்ணாவிரதத்தை தவிர என்ன செய்தார் அவர் என்று கேட்டதும் பாண்டே கோபத்தின் உச்சிக்கே சென்று இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்களோ எனப் பதிலடி கொடுத்தாரே பார்க்கலாம், அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. சரியான பதிலடி தான். இந்தக் கேள்வியை எல்லாம்  கேட்பதற்கு முன்னர் அவர் ஒரு சாதாரண நடிகர் என்பதை ஒருநிமிடம் யோசித்துவிட்டு கேட்க வேண்டும். அப்படியிருந்தும் அவர் பெரியளவிலான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்.


ஒரு ஆட்சியில் இருந்த அதிருப்தியையும், மக்கள் விரோதப் போக்கையும் ஆளுங்கட்சி அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே கண்டித்த நடிகரை இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் யாரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற வசனத்தை தமிழக மக்கள் மறந்துவிடுவார்களா.? த.மா.கா தொடங்கிய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூப்பனாரிடம் உங்கள் கட்சியின் தலைவர் யார் என்று கேட்ட போது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியதை எந்த ஊடகவியலாளராவது மறுக்க முடியுமா ? ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய பிறகு இரு மாநில உறவில் விரிசல் வரக்கூடாது என்பதற்காக திரை மறைவில் அவர் எடுத்த ரிஸ்கை யாராவது மறுத்துவிட முடியுமா?  காவிரிப் பிரச்சனையில் அர்த்தமற்ற கரண்ட் மறியல நடத்தச் சென்ற பாரதிராஜாவை வெளிப்படையாக விமர்சித்து சென்னையிலே தன்னந்தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திருப்பியதுடன் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவு தன் பலத்தை நிரூபித்து நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி தருவதாக உறுதியளித்ததை மறக்க முடியுமா? ராஜபக்சேவையும் அவர் ராணுவத்தையும் பார்த்து ஆம்பிளைங்களா நீங்க என பொது மேடையில் பகிரங்கமாக விமர்சித்த வேறு ஒரு நடிகரைக் கூட வேண்டாம் அரசியல்வாதியை காட்டமுடியுமா ? தன்னுடைய படத்திற்கு தொந்தரவு என்றதும் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல், முதல்வர் காலில் விழ கொடநாடு வரை சென்று திரும்பிவராமல் தன்னந்தனியாக சமாளித்த வேறு ஒரு நடிகரை காட்ட முடியுமா? இவ்வளவு ஏன் சீக்கிரம் வந்துடுவேன் ராஜாக்களா என அவர் உடைந்த குரல் கேட்டு தமிழகம் முழுவதும் பக்தியில் மூழகியதை மறக்கத்தான் முடியுமா? இன்றும் பக்தியில் மூழ்கி இருக்கிறது அது எவ்வாறு என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


இன்னொன்று சொல்கிறார்கள். அதைக் கேட்டால் சிரிப்புத் தான் வருகிறது.`படம் வெளி வரும்போது மட்டும் இவ்வாறு அரசியல் பேசி தன்னுடைய வியாபரத்தை பெருக்கிக் கொள்ளும் சீப் பப்ளிசிட்டியாம், பப்ளிசிட்டி செய்து படத்தை ஓட்டும் நிலையிலா ரஜினி இருக்கிறார். அவரே ஒரு பெரிய விளம்பர ப்ராண்டாகிவிட்ட பிறகு அவருக்கு விளமரம் தேவைப்படும் என்று சொல்வதைவிட கீழ்த்தரமான விளம்பரம் இருக்க முடியாது. சரி விளம்பரத்திற்காக அரசியல் பேசுகிறார் என்றால், தமிழகத்தில் மட்டுமா படம் ஓடுகிறது. ஆந்திர்ரவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும், வட இந்தியாவிலும் , ஆஸ்திரேலியாவிலும்,அமெரிக்காவிலும் ஏன் ஜப்பானில் கூட படம் ஓடுவதற்கு இந்த அரசியல் பேச்சு தான் காரணம் என்று சொன்னால் சொல்பவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியே பார்த்தாலும் சந்திரமுகி படம் வரும்போது எந்த அரசியல் பேசினார் ?, குசேலன் வந்தபோது என்ன அரசியல் பேசினார்? சிவாஜி வந்த போது என்ன அரசியல் பேசினார்? எந்திரன் வந்த போது என்ன அரசியல் கருத்த்களை தெரிவித்தார்? கோச்சடையான் வந்த போது என்ன பாலிட்டிக்ஸ் பேசினார்? இனியும் படம் ஓடுவதற்காகத் தான் அரசியல் பேசுகிறார் என்று சொல்பவர்களைப் பார்க்கும் போது பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.



தகுந்த ஒரு அறிவிப்பை வெளியிடாத போதே இப்படிக் கொதிப்பதற்கு காரணம் என்ன? பயம், ஆம் ! ஒரு வேலை வந்து விடுவாரோ என்ற பயம் மட்டும் தான் காரணம். அவர் வரக்கூடாது, வரக்கூடது என்று கூவும் நடுநிலைவாதிகள்? அவர் வரவில்லை என்றால் மட்டும் யாருக்கு ஓட்டுப் போட்டு அடுத்த முதலமைச்சர் ஆக்கிவிடப் போகிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் இதே தமிழினத் தலிவர்? கருணாநிதி இல்லை ஊழலலை ஒழிக்கப் போகும் ஜெயலலிதா, இவர்களைத் தானே? ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஊடகங்கள் வைக்கும் முதல் கேள்வி நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்பது தான், இனிமேல் அவரைப் பார்க்கும் போது அடுத்த படம் என்ன என்று கேட்டுப் பாருங்கள் , அப்போதும் அவர் நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்று சொன்னால் கழுவிக் கழுவி ஊற்றுங்கள். அதை விடுத்து பதிலைத் தெரிந்து கொண்டு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த நாள் முழுவதும் பரபரப்பை தனது ஊடகத்தில் காட்டிக் கொண்டு வேசம் போட வேறு நாட்டில் பல விசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது..... மக்களுக்கு தெரியாத பல விசயங்கள் இருக்கின்றன அதைப் புரிய வையுங்கள். நேற்றும் கூட அவர் பேசியது எதார்த்தம் தான் என 50 சத மக்கள் வாக்களித்ததையும், போன மாதம் அவருடைய அரசியல் தேவை தமிழ்நாட்டுக்கு கட்டாயம் தேவை தான் என 60 சத மக்கள் வாக்களித்ததையும் திரும்ப திரும்ப பொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மனுஸ்யபுத்திரன் , உதய குமார், ஞானி போன்ற எழுத்தாளர்களும் சமூகப் போராளிகளும் தங்களுடைய பணிகளில் கவனத்தை செலுத்துங்கள். ரஜினி தான் தேவை என்றால் ரஜினியை விமர்சிக்கும் இயக்கம் ஆரம்பித்து தமிழ்நாடு முழுதும் தீவிர பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொள்ளுங்கள்.


தலைவர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இயங்கப் போவது இல்லை என்பதும் அவர் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) இல்லாமல் 2016 சட்டமன்றத் தேர்தல் இல்லை என்பதும் 100 சதம் உறுதியாகிவிட்டது. அவருடைய எண்ணம், ஒரு ரஜினி ரசிகனான எனக்கு புரியாமலில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு இருக்கிறது, வந்தால் ஜெயிக்க முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது அது தான் அவருடைய தயக்கத்திற்கான ஒரே காரணம்.ஒருவேளை அவர் வர வேண்டும் என்று முடிவெடுத்தால் அடுத்த வருட டிசம்பர் வரை தான் காலக் கெடு,அதற்கு பின்னர் அவரே நினைத்தாலும் அரசியலுக்கு வர முடியாது, அப்படி வந்தாலும் அதை நான் சொல்ல விரும்பவில்லை. வயது முதிர்ந்த ஒரு இயக்கத்தின் தலைவர், தலைவரே இல்லாத ஒரு இயக்கம், இதைப் பயன்படுத்தி காலூன்ற நினைக்கும் ஒரு தேசிய இயக்கம், புதிதாக களம் கண்டிருக்கும் ஒரு இயக்கம், தகுந்த சூழலில் இறங்காமல் சூடுபடூக் கொண்ட ஒரு இயக்கம், இது தான்  தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலை. இதைவிட தகுந்த சூழல் இனி தலைவரே நினைத்தாலும் அமையாது. ரஜினி ரசியலுக்கு வருவதைவிட எளிமையான விசயம் வந்த பிறகு இரு பிரதான கட்சிகளுக்கு எதிரான அணியை அமைப்பது.


ஏன் தயக்கம் ஓப்பனாகவே சொல்லிவிடுகிறேன். ரஜினி வந்தால் திமுக அதிமுக கட்சிகளுக்கு எதிரான அணியை பலமாக அமைக்க முடியும். பா.ஜ.க கட்சி முதல்வர் கன‌வு காணவில்லை கட்சியை காலூன்ற வைக்க வேண்டும் அவ்வளவுதான். அதே போல ஜி.கே வாசன் ரஜினியை முதல்வராக ஏற்றுக் கொள்ள ஒருபோதும் தயங்கமாட்டார். வைகோவை சமாதானப்படுத்தி விடலாம். விஜயகாந்தும் ராமதாசும் தான். பா.ம.க வராது. விஜயகாந்த் கேள்விக்குறி தான்.ரஜினி , ஜிகே வாசன்,பா.ஜ.க,வைகோ இந்தக் கூட்டணி அமைந்தால் ஆட்சியைக் கைப்பற்ற அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. திமுக அதிமுகவின் விமர்சனங்களையும் முறியடித்துவிடலாம். கூட்டணி இல்லாமல் தனியாக நின்று ரஜினி ஜெயிப்பாரா ? என்றால் இல்லை என்பது தான் விடை. ஆனால் பலத்த சக்தியாக உருவெடுப்பார். ஆக மொத்தத்தில் தனிக்கட்சியுடன் தலைவர் வந்து தகுந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க இதைவிட பெரிய சந்தர்ப்பம் இனி அமையாது. எந்த விதமான பிரதிபலனுக்காகவும் எதிர்பார்க்காமல் இத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த நாம் தலைவரின் அடுத்த பிறந்த நாள் வரை பொறுத்திருக்க மாட்டோமா என்ன?

ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன். யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை. ஆனால் எது நடந்தாலும்  நான் ரஜினி ரசிகன் என்பதை மட்டும் மாற்றிவிட முடியாது.என்னைப் போலவே தான் எல்லா தலைவரின் ரசிகர்களும் என்று உறுதியாக நம்புகிறேன்........


தயக்கம் போதும் தலைவா, தகுந்த நேரம் இது தான், தயங்காமல் முடிவெடு, நாங்கள் இருக்கிறோம்... உன்னை அவ்வளவு எளிதில் தோற்க விடமாட்டோம்.......


உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...

Wednesday, October 15, 2014

என்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி


என்னைக் கவர்ந்த திரைப்படம் - தளபதி


இத‌ற்கு முன்னர் எழுதிய என்னைக் கவர்ந்த திரைப்படம்-புதுக்கவிதை பற்றிய பதிவை படிக்க இங்கே க்ளிக்கவும்...

http://pudhukaiseelan.blogspot.com/2014/09/blog-post_8.html


என்ன சொல்வதென்று தெரியவில்லை ! ஏன் என்றும் தெரியவில்லை !எனக்குப் பிடித்த படங்களில் பெரும்பாலானவை ரஜினி படங்களாகவே இருக்கின்றன. நான் ரஜினி ரசிகன் என்பதால் இப்படியா ? இல்லை, இந்தப் படங்களால் தான் நான் ரஜினி ரசிகனா  ? என்று சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குப் பிடித்த படங்களில் ரஜினி படங்கள் ,மட்டும் அல்ல, பிற படங்களும் இருக்கின்றது..எனவே, என்னடா இவன் ரஜினி படங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறானே என எண்ண வேண்டாம்.பிற படங்களைப் பற்றியும் நேரம் கிடைக்கும் போது பகிர்வேன்.


Saturday, October 11, 2014

ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ?


ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது ?




ஜெயலலிதா சிறைக்கு போனாலும் போனார், இங்கே தமிழகத்தில் பல கேள்விகளும், ஊகங்களும் உலாவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஊடகங்களுக்கும் வேறு வேலையே இல்லாதது போல செயல்படுவதைப் பார்க்கும் போது வெறுப்புத்தான் வருகிறது. ஒரு நபர் தன்னுடைய கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்காத நிலையில் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு கதை கட்டுவதில் இந்த ஊடகங்கள் அனைத்தும் கை தேர்ந்தவையாக இருக்கின்றன. கடந்த சில நாட்களாக நாளிதழ்களைப் படித்துவருபவர்களுக்கு நான் யாரைப் பற்றி சொல்ல வருகிறேன் எனத் தெளிவாகப் புரிந்திருக்கும். ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடைய அரசியல் குறித்து தான்.

இன்றைய தி இந்து தமிழ் நாளிதள் வாசகர் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்வி, ரஜினிக்கு உகந்தது எது ? 1)தனிக் கட்சி தொடங்குவது 2) பா.ஜ.க வில் சேர்வது 3) அரசியல் வேண்டாம் என்பது தான். இதற்கு ரசிகர்களின் பதில் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், தனிக் கட்சி தொடங்கலாம் என 20 % பேரும், கட்சியில் சேரலாம் என 22% பேரும் அரசியல் ஏண்டாம் என 60% பேரும் சொல்லியிருக்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகம் என்றால் இதையெல்லாம் கேட்க இப்போது அவசியம் என்ன அவசியம் வந்துவிட்டது. ஒரு வேளை ரஜினி அரசியலில் இறங்கப் போகிறேன் என்று ஏதும் வெளிப்படையாகவோ, அல்லது குறிப்பாகவோ சொல்லியிருக்கிறாரா என்றால் இல்லை . பின்னர் ஏன் ரஜினியின் அரசியல் குறித்து அவருடைய ரசிகர்களை விட அதிக ஆர்வம் இந்த ஊடகங்களுக்கு.


இன்னும் சிலர் அவர் அரசியலிலே இறங்கவே இல்லை, அதற்குள்ளாக அவர் என்ன தமிழரா ? அவர் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்? மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறாரா? என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டனர். இதில் ஒரு படி மேலே போய் இந்த உதயகுமார் போன்ற ஆட்கள் அவருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று தங்கள் முகப் புத்தகத்தில் பகிர்ந்து தங்களை உயர்த்திக் கொள்ளும் வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். சரி இதற்கெல்லாம் ரஜினி என்ன பதில் சொல்வார் என்று பார்த்தால் வழக்கம் போல புன்னகை தான். இன்னும் சில ஊடகங்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினரிடம் கருத்து கேட்ட்வருகிறாராம். தனிக் கட்சி தொடங்கலாமா இல்லை பா.ஜ.கவில் சேரலாமா என்று. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல இவர்கள் யார்.





அவர் கன்னடர் என்கின்ற வாதம் எவ்வளவு அபத்தமானது. இதற்கு முன்னால் தமிழகத்தை ஆண்டவர்கள் எல்லோரும் பச்சைத் தமிழர்களா ? அதுவும் அவர் அரசியலுக்கு வரும் முன்பாகவே இவ்வளவு எதிர்ப்பு என்றால் அவர் வந்தால் அவ்வளவு தான். இதில் மற்றவர்கள் எப்படியும் நினைத்துவிட்டு போகட்டும், பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தி இந்து தமிழ் நாள்தழின் கருத்து கணிப்பில் கூட 40 % மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் வாக்களித்திருக்கிறார்கள். அதே போல 1 மாதத்திற்கு முன்னர், தந்தி டிவி நடத்திய வாக்கெடுப்பிலும்  55% மக்கள் அரசியலுக்கு அவர் தேவை என்று தான் வாக்களித்திருக்கின்றனர். இதிலிருந்து நாம் தெளிவான முடிவெடுக்க முடியாது என்றாலும் இதை நாம் புறக்கணித்துவிடவும் முடியாது. ஏனென்றால் அவர் எந்த தெளிவான முடிவும் எடுக்கும் முன்பே இத்தகைய நிலை என்றால் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்ட் வந்தார் என்றால் இந்த நிலை இதை விட அதிகரிக்குமே தவிர குறையாது என்பது என் எண்ணம்.


இன்னொன்றையும் சொல்வார்கள் தன்னுடைய படம் வெளிவரும் போது தான் இது போன்ற ஸ்டண்ட் அடிப்பார் ரஜினி என்று. இது எவ்வளவு கீழ்த்தரமான வாதம். என்னமோ அவரா வந்து ஊடகங்களை அழைத்து வாங்க வாங்க, நான் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை அது ஆண்டவன் கையில் என்று பேட்டி கொடுப்பது போல இருக்கிறது. இப்படி சொல்ல அவர் என்ன மூளை இல்லாதவரா. அவர் ஊடகங்களைச் சந்திப்பதே அரிதானது. அப்படி சந்திக்கும் போதெல்லாம் நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேட்பது ஊடகங்கள் தானே தவிர, ரஜினி அல்ல. இங்கு பல படங்கள் ரஜினியைக் காட்டி ஓடும் போது அவருக்கு இந்த கீழ்த்தரமான பப்ளிசிட்டி அவசியம் தானா. அவருக்கு படம் நடிக்க வேண்டிய அவசியமே இல்லாத போது, இப்படி ஸ்டண்ட் அடித்து படம் ஓடவைக்க என்ன அவசியம் வந்துவிட்டது.நடித்து சம்பாதிக்கிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.அவருக்கு பணம் தான் முக்கியம் என்றால் வருடத்திற்கு மூன்று படங்கள் நடித்து சம்பாதிக்க முடியும் ஆனால் அப்படி செய்யவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும்.


மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காதவரெல்லாம் அரசியலுக்கு வரக் கூடாதாம். அவர் ஒரு நடிகர் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த கேள்வியைக் கேட்டுவிட முடியுமா? அப்படியிருந்தும் பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய கருத்துகளை தைரியமாக
வெளிப்படுத்தியிருக்கிறார். இவரளவுக்கு பொது பிரச்சனையில் குரல் கொடுத்த வேறு பெரிய நடிகர்களை உங்களால் காட்ட முடியுமா ? ஒரு ஆட்சியில் இருந்த அதிருப்தியை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைத்தவர் ரஜினி மட்டும் தான்.தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்தோ, இல்லை ஓடிப்போய் முதலவர் காலில் விழுந்தோ காரியம் சாதிக்க நினைத்தது கிடையாது. தனியாகவே சமாளித்தார் அதிலிருந்து மீண்டும் வந்தார். அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டே எத்தனையோ பேர் மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை என்பதையும் மறுத்துவிட முடியுமா ??




ஒருவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே இவ்வளவு எதிர்ப்பு வருகிறது. அவர் கட்சி ஆரம்பித்த பின்னர் அவருடைய கொள்கைகளை விமர்சிப்பதை விடுத்து தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது நியாயம் தானா எனவும் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் தமிழ்ப்பெண்ணை திருமணம் புரிந்து தமிழர்களுக்கே தன் பிள்ளைகளையும் மணமுடித்து தமிழராகவே மாறிவிட்ட பிறகு அவரை கன்னடர் என்று சொல்வது நியாயம் தானா என்பதையும் யோசிக்க வேண்டும். அவர் தன்னை கன்னடராக எங்காவது, இல்லை எந்த நிகழ்சியிலாவது சொல்லியிருக்கிறாரா? தன்னுடைய படம் உலக அளவில் பேசப்படும் போதெல்லாம்  இது எனக்குக் கிடைத்த பெருமையல்ல ஒட்டுமொத்த தமிழருக்கும் கிடைத்த பெருமை என்று தான் சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய சினிமா செல்வாக்கை வைத்து மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று நினைப்பதற்கு அவரும் முட்டாளில்லை தமிழக மக்களும் முட்டாள் இல்லை. அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்து தான் அவருடைய ரசிகர்களே ஓட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. சரி அவர் அரசியலுக்கு வரவில்லை. அப்போது யாரை மக்கள் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இதே கலைஞர் இல்லை இதே ஓபிஎஸ் இவ்வளவு தானே. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது இருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லாததற்கான காரணம் அவருடைய செயல்பாடுகள். ஒரு வேளை அவரைப் போலவே ரஜினியும் இருந்தால் அவரையும்  மக்கள் புறக்கணிக்க ரொம்ப நாள் ஆகாது. இன்னொன்று, ரஜினி அரசியலுக்கு வந்தால் பிற அரசியல் வாதிகளைப் போல இருக்க மாட்டார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இது அவரை பல காலம் பார்த்து வரும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். 1996 ல் ஆட்சி தேடி வந்ததையே தவிர்த்தவர் அவர் என்பதையும் மக்கள் மறக்கவில்லை.


என்னை பொறுத்தவரை தலைவர் அடுத்த வருட ஆரம்பத்தில் கட்சி ஆரம்பித்து, தன் கொள்கைகளை தெளிவாக வகுத்து தமிழகம் முழுதும் வலம் வந்து தேவையான கூட்டணியை சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும். ஒரு வேளை மக்கள் அவரைப் புறக்கணித்தால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்றுவிட‌ வேண்டும். ஒருவேளை அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் அதையும்விட‌ அதிகம் மகிழ்சியடைவேன். யாரிடமும் இழிபழிக்கு ஆளாகாமல் கடைசிவரை சூப்பர் ஸ்டாராக இருப்பது எவ்வளவு பெருமை. இந்த முறை அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் அவரை அரசியல் விடாது  அல்லது அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது..... மாற்றம் கொண்டுவந்த தலைவரின் தொண்டனா இல்லை என்றும் மாறாத சூப்பர் ஸ்டார் ரசிகனா என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.....  பதில் எதுவாகினும் ஏற்றுக் கொள்வேன் என்றாலும் இரண்டாவது நடந்தால் ரொம்ப மகிழ்சியடைவேன்.....



நல்லவுங்களுக்கெல்லாம் அரசியல் சரிவராது தலைவா... வந்தால் உங்களையும் கெட்டவராக்கிவிடுவார்கள்... முடிவு உங்கள் கையில்,,என்ன முடிவெடுத்தாலும்  

என்றும் உங்கள் ரசிகன் சீலன்....


மாற்றுக்கருத்துகள் தாராளமாக வரவேற்கப்படுகின்றன...

Friday, October 10, 2014

எண்ணக் கிறுக்கல்கள் - 3 (WEEK END SPECIAL-3)


எண்ணக் கிறுக்கல்கள் - 3



சென்ற வாரம் பூஜா விடுமுறை என்பதால் புதன் கிழமையே காலேஜ் கட் அடித்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டேன்.அங்கே போனதும் இன்னொரு ஆச்சர்ய தகவல் கிடைத்தது. பக்ரித் தள்ளிப் போனதை முன்னிட்டு திங்களும் லீவ் என்று`! திடீரென்று ஜெயலலிதாவுக்கு விசுவாசத்தைக் காட்டுகிறேன் என்று தனியார் பொறியியல் கல்லூரிகள் செவ்வாயும் விடுமுறை அறிவிப்பு வெளியிட, அடடா வடை போச்சே ( என்னுடையது அண்ணா பல்கலை ஆயிற்றே )என்று கிளம்பிவந்தேன். ஒரு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவற்கு இவ்வளவு ஆதரவா ?? இல்லை வற்புறுத்தப்படுகிறார்களா ? என்பது ஊரறிந்த ரகசியம். கோர்டுக்கு போன பின், பின்வாங்கிய அவர்கள் கல்லூரி, பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவித்துவிட்டனர்.

Tuesday, October 7, 2014

எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் !


எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் !


என்னையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது தான் போல, நீண்ட நாட்களாக எழுத யோசித்த பதிவு , ஐந்து நாள் பூஜா விடுமுறையில் எந்தப் பதிவும் எழுதவில்லை. விடுமுறை முடிந்து இன்று காலை தான் ஹாஸ்டல் வந்தேன். வந்த களைப்பில் காலை காலேஜுக்கு கட் அடித்தாகிவிட்டது. நல்லதொரு தூக்கம் போட்டு எழுந்ததும் வலைப்பக்கம் வந்தேன்.பதிவுகள் குவிந்திருந்தன. அவற்றை படித்து பின்னூட்டம் இட்டதும் இந்த பதிவை எழுத ஆரம்பித்திருக்கிறேன், இதுவும் ஒரு இரண்டு, மூன்று பதிவாக வெளியிடத்தான் திட்டம். ஏனென்றால் நம்க்குத்தான் நிறைய பேரை பிடிக்குமே....முதலிலிருந்து போகாமல் கடைசியிலிருந்து போகலாம் என நினைக்கிறேன்.